பயணிகளை ஏற்றுவதில் போட்டி : கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள் மோதல்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோவைக்கு செல்ல 2 பஸ்கள் தயாராக இருந்தன. கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு போக்குவரத்துகழக பணிமனைகளை சேர்ந்த 2 பஸ்களின் டிரைவர்கள் இடையே யார் முதலில் பயணிகளை ஏற்றி செல்வது என்ற போட்டி ஏற்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் முதலில் நாங்கள் தான் பயணிகளை ஏற்றிசெல்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்., 2 பஸ்களின் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியாமல் காத்திருந்தனர். அந்த சமயத்தில் பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் இருதரப்பையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்து 2 பஸ்களும் பயணிகளை ஏற்றுக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பி சென்றன.
இன்னொரு சம்பவம்
இதேபோன்று கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றில் கயத்தார் வில்லிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் ஏறி இருந்தனர். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் சென்றதும், வில்லிசேரியில் பஸ் நிற்காது, கயத்தாறு ஊருக்குள் பஸ் செல்லாது என்று கூறி பஸ்சில் இருந்த கயத்தார் மற்றும் வில்லிசேரி பயணிகளை இறக்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறக்கிவிடப்பட்ட பயணிகளை வேறு அரசு பஸ் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்,.
