கோடை மழையில் விளைந்த பசுந்தீவனங்கள்; கால்நடைகளுக்கு கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வற்றி, புல்பூண்டுகள் காய்ந்து சருகாகி கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போனது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கூமாபட்டிக்கு வளர்ப்பு ஆடுகளை கொண்டு சென்று விவசாயிகள் காப்பாற்றி வந்தனர்.
நிரம்பி இருந்த நீர் நிலைகளில் ஏப்ரல் மாதம் கடும் வெயிலால் தண்ணீர் வற்றியது. கால்நடைகளுக்கு உலர்ந்த தீவனங்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 40 நாட்களில் பெய்த மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு கால்நடைகளின் தாகத்தை கோடை மழை போக்கியது.
ஆகஸ்டு மாதம் வரை குடிநீருக்கும் கால்நடைகள் குடிநீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. தற்போதைய மழைக்கு திசை எங்கும் இலை தழைகள் முளைத்து பசுந்தீவனங்கள் விளைந்து கிடைக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பதால் கால்நடை வளர்ப்போர் வெகு தூரம் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
