பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; மசூதிகளில் சிறப்பு தொழுகை

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.
புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள்.இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பானி எனப்படும் வழிபாடு செய்கின்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கு தகுந்தவாறு பலியிட்டு அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று ஆடுகளை பலியிட்டு குர்பானி வழங்கினர்
இதே போல் கோவில்பட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
