திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சி லட்சுமணன்பட்டி நால்ரோட்டில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று வியாழக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற இளைஞர்கள் எதற்காக லாரி இங்கே நிற்கிறது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கிளீனர் வழி மாறி வந்து விட்டோம் திருப்புவதற்காக இங்கே நிறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இளைஞர்கள் வந்து பார்த்த போது மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் ரத்த கரையுடன் ஏராளமான கையுறைகளும் மருத்துவமனை ஊசி, ரத்த கரையுடன் கூடிய பாண்டேஜ், மற்றும் ஏராளமான மருத்துவ கழிவுகள் காணப்பட்டன.
.மேலும் இதே போல் அந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு இடத்தில் இதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டி அதற்கு தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபற்றி தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்ன தம்பியிடம் கேட்ட போது இந்த விவகாரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கொடுத்திருப்பதாகவும் அவர்களது பதில் கிடைத்தவுடன் காவல்துறையிடம் புகார் கொடுத்தபின் இந்த மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
