விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வேட்பாளராக திமுக சார்பில் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா களம் காணுவார் என்று அறிவிக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை பாமக அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் சி அன்புமணி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவானது.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்றும், தேர்தலைக் கண்டு அஞ்சும் கட்சி அல்ல அதிமுக என்பதை அனைவருமே நன்கு அறிவர். மக்களவைத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களை செய்து திமுக வெற்றிபெற்றுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
