குவைத் தீவிபத்தில் இறந்த வானரமுட்டி மாரியப்பன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு ; அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை

அரபு நாடுகளின் ஒன்றான குவைத்தில் அஹ்மதி மாகாணம் மங்காப் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 50 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் ஆவர்.. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகன் மாரியப்பன் என்பவரும் ஒருவர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் விமான மூலம் நேற்று மாலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் ஆம்புலன்ஸ்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஏற்கனவே அங்கு மாரியப்பன் குடம்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்துடன் கூடி இருந்தனர்., மாரியப்பன் உடல் வந்ததும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்,
பெட்டியில் வைக்கபப்ட்டு இருந்த மாரியப்பன் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் சரவணப் பெருமாள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி சுந்தரி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.பி. ராஜகோபால், முத்துராமலிங்கம், அதிமுக நிர்வாகிகள் அலங்கார பாண்டியன், பழனிக்குமார் மற்றும் அண்ணாதுரை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் , ஊர் மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாரியப்பன் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மாரியப்பன் உடலுக்கு அவரது மகன் கதிர்நிலவன் தீ மூட்டினார்.
