• June 8, 2025

கோவில்பட்டி ஜமாபந்தியில் மனு கொடுத்து ஒரு ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை; த.மா.கா.குற்றச்சாட்டு  

 கோவில்பட்டி ஜமாபந்தியில் மனு கொடுத்து ஒரு ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை; த.மா.கா.குற்றச்சாட்டு  

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24 உட்பட்ட கடலையூர் சாலை, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு முறையாக தீர்வை செலுத்தி வருகின்றனர். இந்த வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் மற்ற துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில், வருவாய்த்துறை மட்டும் பாராமுகமாக இருந்து, பட்டா வழங்க மறுத்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு வள்ளுவர் நகர் பகுதியில் சர்வே எண் 513-ல் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பதில் ஒரு சில நபர்களுக்குள் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அப்போதைய வட்டாட்சியரால், சர்வே எண் 513 முழுவதும் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.

அதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் தங்களது நிலங்கள், குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அப்போது பிறக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்து 7 ஆண்டுகளை கடந்து அமலில் இருப்பது அப்பாவி, ஏழை எளிய மக்களை பாதித்து வருகிறது. இதனால் அரசு உதவி பெறுவதில் பல இடர்பாடுகள் உள்ளன.

எனவே, பொது அமைதி நிலவி வரும் அப்பகுதியில் 2017-ம் ஆண்டில் வட்டாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து சர்வே எண் 513-ல் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு அனுமதி அளித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் மனு வழங்கினோம். ஆனால், ஓராண்டாகியும் எங்கள் மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் வழங்கப்படும் மனுக்கள் மீது 7 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது விதி. ஆனால், நாங்கள் மனு வழங்கி 365 நாட்களை கடந்து விட்டது. ஜமாபந்தி விதியை பின்பற்ற வலியுறுத்தியும், மக்களின் மனுக்கள் மீது பாராமுகமாக இருந்து, கண்துடைப்புக்காக ஜமாபந்தியை நடத்தும் அதிகாரிகளை கண்டித்தும் தெய்வத்திடம் முறையிட்டு வேண்டுவதற்காக, கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மனு வழங்கும் போராட்டம் நடத்தினோம்,

இந்த பிரச்சினைக்கு வரும் 17-ம் தேதிக்ககுள் தீர்வு காணாவிட்டால், 18-ம் தேதி (செவ்வாய் கிழமை) ஜமாபந்தி அலுவலர்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *