கோவில்பட்டியில் ஏ.டி.எம்.இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் சிக்கினார்

கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டி.பி.எஸ். வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.
இந்த மையத்தில் கடந்த சனிக்கிழமை (8.6.2024) அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்தார்.
அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர், யாராவது வந்தால் மாட்டிகொள்வோம் என்ற பயத்தில் தனது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்தவரை கண்டுபிடித்தனர்.
தென்காசி மாவட்டம் கீழ அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் ராஜா (வயது 28) என்பவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைதான கார்த்திக் ராஜா மீது குருவிகுளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடக்கிறது.
