அமைச்சர் செஞ்சி மஸ்தானின், திமுக மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
விழுப்புரம் திமுகவில் அமைச்சர் பொன்முடி தரப்புக்கும், செஞ்சி மஸ்தான் தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. பொது மேடையில் செஞ்சி மஸ்தான் மீது பொன்முடி கோபத்தை காட்டிய வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே சமயம் , விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், துறை ரீதியிலான நிர்வாக விஷயங்களிலும் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. இதனால் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீர், செஞ்சி நகர செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல, மஸ்தான் மகன், மருமகன் ஆகியோரின் கட்சிப் பதவிகளும் கடந்த ஆண்டு பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட கள நிலவரங்கள் தொடர்பாக பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ப.சேகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் பொன்முடி மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதமசிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
