இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை: கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி 24 ம் தேதி தொடக்கம்

கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டி கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 13 வது இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஆக்கிப் போட்டி, டெல்லி, ஹாக்கி இந்தியாவின் அனுமதியுடன் நடக்க இருக்கிறது.
வருகின்ற 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்.
இது குறித்து கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அகில இந்திய ஆக்கி போட்டி தொடக்கவிழா 24ம் தேதி காலை 6.45 மணி அளவில் நடைபெற உள்ளது. டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நடுவர்கள் கலந்து கொண்டு போட்டியை நடத்த உள்ளனர்.
இப்போட்டியில் அகில இந்திய அளவிலான பல்வேறு ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் – அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் – நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) – போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் – கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இப்போட்டிகள் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
போட்டியில் கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவு, தங்குமிட வசதி, உணவு அனைத்தும் அறக்கட்டளையினரால் வழங்கப்படுகிறது.
காலை 7 மணி, மாலை 5.15 மணி, 6.45 மணி மற்றும் இரவு 8.15 மணி என தினமும் 4 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை.
போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 75 ஆயிரம் , மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 50 ஆயிரம் , நான்காவது இடம் பெறும் அணிக்கு 30 ஆயிரம் ரொக்க பரிசு,இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஆக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முனைவர் கே.காளிதாஸ முருகவேல், முனைவர் எஸ்.மதிவண்ணன் மற்றும் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
