கோவில்பட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம்

கோவில்பட்டி கி.ரா.மணிமண்டபத்தில்,
தூத்துக்குடி மாவட்ட நிர்வாககம், கோவில்பட்டி தமிழ்நாடு சிறார். எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து, மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் தொடங்கியது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை 26 ந் தேதி வரை இந்த கொண்டாடடம் நடக்கிறது. நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொள்கிறார்.
14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இந்த கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில், அவர்களிடம் இருக்கும் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்காக, கலெக்டர் லட்சுமிபதி ஆலோசனையின்பேரில், முதல் முறையாக நடக்கிறது.
இதன் துவக்க விழாவுக்கு, கோவில்பட்டி கோட்டாட்சியர் பிரபு தலைமை தாங்கி, கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் அமைந்துள்ள ஆள் உயர கி.ரா.நினைவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து கோடை கொண்டாட்டம் அவசியம் பற்றி எடுத்துக் கூறி கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவியர்களை வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செம்மல், பாலபுரஸ்கார் விருதாளர் உதயசங்கர், கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாள், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ஜெயப்பிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சிறார் இலக்கிய அமைப்பு கோவில்பட்டி செயலாளர் பிரபுஜாய் அனைவரையும் வரவேற்றார்.
முதலில் மேடை ஏறிய மாணவ மாணவிகள் வரவேற்பு நடன பாடல் பாடி அசத்தினார்கள். தொடர்ந்து கதை சொல்லி பாடல் என்று பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர், மாணவர்களுடன் சேர்ந்து பாடி, அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சிறார் இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்கள் மணிமொழிநங்கை, கண்ணகி, தங்கத்துரையரசி, ராஜலட்சுமிநாராயணசாமி, முருகேசன் ஆகியோர் கதைசொல்லல் வழி முறைகளான சொற்களின் ஏற்றம், இறக்கம், கதையின் மூலக் கருத்து விளக்கம் மற்றும் எளிமையான பாடல்களை எப்படி பிறர் கேட்கும் முறைகளை வரிசைப்பட விளக்கத்துடன் பாடி பலத்த கைதட்டலை பெற்றனர். சிறப்பு அழைப்பாளர் சங்கரன்கோவில் மதியழகன் குழுவினரின் “ குழந்தைகள் நாடகம்”நடந்தது. நெகிழி பயன்பாட்டின் தீமைகளை விரிவான விளக்கத்துடன் எடுத்துக்கூறினர்.
விழாவில், துாத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியைச் சேர்ந்த சாமுவேல் ஜான்சன், ஆசியா பார்ம்ஸ் பாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி, சிறார் இலக்கிய அமைப்பு ஆர்வலர் சுரேஷ்குமார், மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
