நீர் நிலைகளின் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்க வேண்டும்; பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம் குரும்பூர் அருகே அங்கமங்களம் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி வரவேற்றார். சமூக ஆர்வலர் அங்கமங்கலம் என். பாலமுருகன், காயல். ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார் . கூட்.டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையினால் தாமிரபரணி ஆறு, வாய்க்கால், ஏரிகள் மற்றும் கடலுக்கு பாதி கடம்பா என்று போற்றக்கூடிய கடம்பா குளம் உட்பட பல்வேறு , குளங்கள் நீர் நிலைகள் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு சேதங்கள் அடைந்துள்ள நீர் நிலைகளை உடனடியாக சீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும்.
*சீரமைப்பு செய்த நீர் நிலைகளின் கரையோரங்களில் பனை மர விதைகளை விதைக்கவும், மேலும் வெட்டிவேர்களை நடவு செய்யவும் வேண்டும்.
* மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீர் நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் சீம கருவேல மரங்களை அகற்ற வேண்டும். *வெள்ளத்தால் சேதம் அடைந்த ஏரல் மற்றும் ஆத்தூர் பாலங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் தலைவராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி, செயலாளராக சமூக ஆர்வலர் அங்கமங்கலம் என் . பாலமுருகன், பொருளாளராக லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, துணைத் தலைவராக ஜாஹிர் உசேன், துணைச் செயலாளராக காயல். பாலா அறங்காவலர்களாக முத்து செல்வன், அபினேஷ், கவுதம், சிவா, நைனார், சாமத்துரை இம்மானுவேல் தனசிங், சுப்பையா, ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் துணைச் செயலாளர் காயல்.பாலா நன்றி கூறினார்.
