பழைய உணவை பிரிட்ஜில் வைத்து விற்பனை :தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடையின் உரிமம் ரத்து

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி., உணவு பாதுகாப்பு ஆணையர் (பொ) ஹரிஹரன்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சியில் எட்டயபுரம் சாலையில் உள்ள அசைவ ஓட்டலான ஹனிபா பிரியாணி கடையில் இன்று (15.5.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் அல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அவை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்திவந்ததும் உறுதியானது.
எனவே, “ஹனிபா பிரியாணி” என்ற பெயரில் பிரான்சைஸ் எடுத்து, லிவிங்ஸ்டா என்பவருக்குச் சொந்தமான மேற்படி ஹனிபா பிரியாணி என்ற கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய தீர்மானித்து, உத்திரவு வழங்கப்படவுள்ளது.
இதனால் , அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
