கோவில்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி

கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவரது ஆட்டோவில் இளம்புவனத்தில் இருந்து எட்டயபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.
கோவில்பட்டி சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுலவகம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் கண்ணன், மற்றும் பைக்கில் வந்த இளம்புவனத்தைச் சேர்ந்த சுடலை முத்து மகன் நந்தா (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் இருந்த பழைய தேவர் சிலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அம்மா தாய் (73), நாகராஜ் மனைவி கலைஜோதி (40), மகள் கார்த்திகா (20), மகன் கலை கார்த்திக் (14) ஆகிய 4பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த 2பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
