கோவில்பட்டி அருகே மழைக்காக ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பலி

கோவில்பட்டி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை பலத்த காற்று ,இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து விருதுநகருக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊரணி பட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(வயது 55) என்பவர்சென்று கொண்டிருந்தார்.
மாலை 3:30 மணியளவில் கோவில்பட்டிக்கு முன்னதாக நாலாட்டின்புதூர் பகுதியில் வந்தபோது மழைக்காக சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு மரத்தின் கீழ் ஓரமாக நின்று உள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
