கோவில்பட்டியில் பெயிண்டர் குத்திக் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பாண்டி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மேலும், பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில், உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தார்.அப்போது வீரபாண்டி நகரை சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (27) என்பவர் வீட்டிற்கு வந்தார்.
இருவரும் சேர்ந்து மது குடித்தார்களாம். அப்போது அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் முத்துப்பாண்டியை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸிலி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.