கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று (26 4 2024 )வெள்ளி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியை காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு அந்தோணி அ.குருஸ் அடிகளார் ,திருச்சி புனித பவுல் குருமடம் அருட்திரு ராஜேஷ் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார் மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து பங்கு தந்தையர் பங்களாவில் இருந்து பவனியாக எடுத்து வந்தனர்.

உலகின் சமாதானத்திற்காக வெள்ளை நிற புறா பறக்க விடப்பட்டு மேளதாளங்கள் , வாணவேடிக்கைகள் முழங்க இறை ஜெபத்துடன் திருவிழா கொடியை காமநாயக்கன்பட்டி பங்கு தந்தை ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து ஆபிரகாம் இறைவேண்டல் எனும் மறையுரையுடன் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் மாலையில் திருப்பலி நடைபெறும் . இதில் எட்டாம் நாள் திருவிழா அன்று நவநாள் திருப்பலியும் ,உணவு திருவிழாவும் 9ஆம் நாள் திருப்பலி முடிந்த உடன் இரவு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பர் சப்பரபவனியும் நடக்கும்.
பத்தாம் நாள் காலையில் புது நன்மைவிழாவும் மாலையில் ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து நற்கருணை பவனியானது திருத்தலம் வந்து சேர்ந்து திருத்தலத்தில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
