பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் பலர் இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி மீது புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரில், “தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
காவல் நிலையத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், இந்திய கலாச்சார நட்புறக்கழகம் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் மாணிக்கராஜ், தமிழ் புலிகள் கட்சி வழக்கறிஞர் பீமராவ், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனிராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பொன்ஸ்ரீராம், ஏ. ஐ. டி. யு. சி. உத்தண்டராமன் உட்பட பலர் சென்று இருந்தனர்.