சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து டாக்டர் தம்பதி-தாயார் பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). இவரது மனைவி ரமணி (45). இருவரும் மருத்துவர்கள்.
இன்று காலை கணவன், மனைவி மற்றும் ரவீந்திரனின் தாயர் சேர்மதாய் (70) ஆகிய மூவரும் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர்.. காரை ரவீந்திரன் ஓட்டினார்.
கோவில்பட்டி தாண்டி கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் சென்ற போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரவீந்திரன் உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது. விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
