கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; 13 ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
![கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; 13 ந்தேதி தேரோட்டம் நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2024/04/fb7f76a4-b78c-414f-b22c-4b992ec22702-850x560.jpeg)
கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் உள்ளது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி திருவிழாவும் ஒன்று. 11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழா, இன்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
9-ம் திருநாளான 13-ம் தேதி காலை 8 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து, தீபாராதனையும் நடக்கிறது. 11-ம் திருநாளான வரும் 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவவிழா நடைபெறவுள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)