எலி எச்சங்களுடன் மாவு மூட்டைகள்: கோவில்பட்டி கடலைமிட்டாய் ஆலை மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர், ஒரு புகார் அடிப்படையில், கோவில்பட்டி பகுதியில் இயங்கும் ஜெயா ஸ்வீட்ஸ் என்ற கடலைமிட்டாய், மிக்சர் மிட்டாய் மற்றும் எள் மிட்டாய் தயாரிக்கும் ஆலையை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த ஆலையானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், உரிய கணக்குக்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த ஆலையில் , எலியின் எச்சங்கள் படர்ந்திருந்த 840 கிலோ கிழங்கு மாவு, பட்டாணி மாவு மற்றும் மைதா கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. , 100 கிராம் அளவிலான 5000 மிக்சர் மிட்டாய் பாக்கெட்டுகள், 800 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் உரிய லேபிள் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டது..
மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் கடலைமிட்டாய் தயாரிப்பு ஆலை இருந்ததினால், அந்த ஆலையின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு, அந்நிறுவனத்தின் இயக்கத்தினை உடனடியாக நிறுத்திவைக்க நியமன அலுவலர் உத்தரவிட்டார்.
