கோவில்பட்டி அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண் வெட்டிக்கொலை

கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சின்னமணிக்கும் அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத சின்னமணி, ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இந்த கொலையை தொடர்ந்து ராஜேஸ் கண்ணன், எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
மேலும் சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பஸ்டாப்பில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
