சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்; மாணவர்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேச்சு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் இணைந்து ‘அவளதிகாரம்’ என்கிற தலைப்பில் இன்று (11/3/2024)நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், மாணவ மாணவிகளின் கேள்விகளுக்குக் கனிமொழி எம்.பி பதிலளித்தார். முன்னதாக பல்கழைக்கழக மாணவர்களால் எடுத்த பெண்களின் புகைப்படக் கண்காட்சியை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்.
சென்னை பல்கலைக்கழக வளாக இயக்குநர் டாக்டர் சு.அம்ஸ்ட்ராங், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியதாவது;-
நான் அரசியல் பேச வரவில்லை, ஆனால் அரசியல் பேசாமல் இருக்க முடியாது, நம்மை சுற்றியுள்ள அனைத்திலும் அரசியல் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னால் மகளிர் தினத்தன்று இந்த நாட்டில் ஒன்றிய அரசாங்கம் பெண்களுக்கு பரிசு கொடுத்தது. சமையல் எரிவாயு 100 ரூபாய் குறைத்தது தான். மகளிர் தினத்திற்கு அரசாங்கம் ரொம்ப சிந்தித்து 100 ரூபாயை குறைத்து பரிசாக கொடுத்துள்ளது. சமையலறையில் மட்டும்தான் அவர்களுடைய வாழ்க்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு ஒன்றிய அரசு செய்யக்கூடிய விஷயம் இதுதான். எவ்வளவு மாற்றம் வர வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
தந்தை பெரியார் சொன்னது போல பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி எடுத்து விட்டு, புத்தகங்களை கையில் கொடுங்கள் என்று சொன்னது திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் சொன்னது போல் ஆண்மை அழிந்தால் தான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆண்மையை தான் அடக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர ஆண்கள் அழிய வேண்டும் என்று சொல்லவில்லை.
உண்மையான பெண் விடுதலை என்றால், இரண்டு பேருக்குமான சமமான தளத்தில் சமமான உரிமை கிடைக்கும் பொழுது உங்களுக்கும் எங்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் மாநிலம் தமிழ்நாட்டில் தான். அதே நேரத்தில் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று மறுக்கக்கூடிய நினைக்கக்கூடிய சமுதாயமாகமும் இருக்கிறது.
டெல்லியில் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலால் போராடினார்கள், அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தவறு செய்தால், பாதுகாப்பாக இருக்கிறார்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை.
இந்த சமூகத்தில் ஆண்ணும் பெண்ணும் சமம் எது தடையாக வந்தாலும் அதை உடைத்தெறி என்று சொன்ன ஒரே தலைவன் தந்தை பெரியார் மட்டும் தான். பெரியாரைப் பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது ஆனால், பெரியாரை கற்றுக் கொள்ளுங்கள் இந்த சமூகம் மாற்றமடைய அவரிடம் நிறைய கருத்துக்கள் இருக்கிறது.
இவ்வாறு கனிமொழி எம். பி. பேசினார்.