• June 8, 2025

அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் நாய்கள் தொல்லை; நாள்தோறும் நடக்கும் நாய்க்கடி சம்பவத்தால்  பொதுமக்கள் பீதி  

 அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் நாய்கள் தொல்லை; நாள்தோறும் நடக்கும் நாய்க்கடி சம்பவத்தால்  பொதுமக்கள் பீதி   

கோவில்பட்டி நகராட்சி மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி நகரை எடுத்துகொண்டால் முக்கிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிகின்றன.

செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே எட்டயபுரம் சாலையில் இரவு நேரத்தில் எப்போதும் நாய்க்கூட்டத்தை காணமுடியும். இது போல் வேலாயுதபுரம், புதுரோடு, கடலையூர் ரோடு பகுடியிலும் நாய்த்தொல்லை அதிகம் இருக்கிறது.

கோவில்பட்டி நகருக்கு அருகாமையில் உள்ள சுபா நகரில் சில மாதங்களுக்கு முன்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி ஓடி வந்த நாய் குறுக்கே வந்ததால் மோட்டார்சைக்கிளில் சென்ற போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து  இறந்து போனார்.

அப்பனேரி ஊராட்சியில் அடங்கிய வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில் நாய்களின் எண்ணிக்கையும்  பெருகிக்கொண்டே போகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் நாய்கள் கூட்டமாக அணி சேர்த்து நடமாடுகின்றன, “இது எங்க ஏரியா… உள்ளே வராதே…” என்ற எண்ணத்தில் வேறு பகுதியில் இருந்து நாய்கள் வந்தால் பாய்ந்து சென்று விரட்டி அடிக்கும்.

நடந்து செல்பவர்களை கண்டால் சில சமயம் அமைதியாக இருக்கும் நாய்கள் திடீரென குரைத்துக்கொண்டே விரட்டிசென்று கடிப்பது என்பது நாள்தோறும் நடக்கும் ஒன்றாகி விட்டது. இரவு நேரத்தில் நாய்களுக்கு பயந்து வெளியே செல்லவே பொதுமக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் நாய்கள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. காலை நேரத்தில் பள்ளிக்கூட பஸ்சில் ஏற்றச்சென்ற போது தாய், மகள் ஆகியோரை ஒரு கடித்து காயப்படுத்தியது. இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஒய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் என்பவரை ஒரு நாய் கடித்து விட்டது. கிருஷ்ணா காரடன் பகுதிக்கு நடைபயிற்சிக்கு சென்ற ராமலிங்கத்தின் பின்புறம் வந்த நாய் திடீர் என அவரது வலது பின்னங்காலில் கடித்து குதறியது.

இதை சற்றும் எதிர்பாராத ராமலிங்கம், கீழே விழுந்து விட்டார். பின்னர்  சுதாரித்துக்கொண்டு சத்தம் போட்டார் . அப்போது அந்த நாய் அவரது இடது கையை கவ்வி  கடித்தது. அந்த சமயத்தில் சிலர் பார்த்து ஓடி வந்தனர், இதற்கிடையே நாய் அங்கிருந்து நழுவி விட்டது.

காலில்பட்ட நாய்க்கடியால் ரத்தம் கொட்டியது.. இதை தொடர்ந்து ராமலிங்கத்தை அவரது குடும்பத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  டாக்டர்கள் உடனடியாக காயத்தை சுற்றி 7 தடுப்பு ஊசிகள் போட்டனர். மேலும் இடைவெளி விட்டு 3 தடவை ஊசிகள் போடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கொல்வதற்கு தடை இருக்கும் வேளையில தெரு நாய்களின் இனபெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே அப்பனேரி ஊராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடலாமா என்பது பற்றியும் ஆலோசிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *