கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஆக்கி விளையாட்டு மையம் : கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான முதன்மை நிலை ஆக்கி விளையாட்டு மையம் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று (9/3/2024) அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு.அந்தோனி அதிஷ்ராஜ், சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் எம். ரோஸ் பாத்திமா மேரி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கனிமொழி கருணாநிதி எம்.பி கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மானிய கோரிக்கையில் அறிவித்தபடி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான முதன்மை நிலை ஆக்கி விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் தரை தளம் 825 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 428 சதுர மீட்டர் பரப்பளவிலும் என மொத்தம் 1253 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, கழிப்பறை, பொருட்கள் வைக்கும் அறை, அலுவலக அறை, விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் அறை, பார்வையாளர்கள் அறை, சிகிச்சை அறை போன்ற வசதிகளுடன் அமையப்பெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
