கவிஞர் வைரமுத்துவின் `மகாகவிதை’ நூலுக்கு ரூ 18 லட்சம் விருது: மலேசியா விழாவில் வழங்கப்பட்டது

`மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.
தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் பரிசுத் தொகை வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த மலேசிய பல்கலைக்கழக தமிழ் அறிஞர்கள் 5 பேர் நூல் குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
