உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; டி. ஜெயக்குமார் வலியுறுத்தல்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்களும், சட்ட கல்லூரி மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் 8 வது நாளாக சென்னையில் இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் “இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 உட்பிரிவின்படி மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கும் பொழுது தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு அதிமுக என்றென்றும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-
1998 ஆம் ஆண்டு மத்திய பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக இருந்த பொழுது, காவிரி உரிமைக்காக தமிழர் நலனுக்காக கூட்டணியை விட்டு வெளியே வந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் 17 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பலம் வாய்ந்த கூட்டணி கட்சியாக இருந்த திமுக தமிழக உரிமைகளுக்காக என்ன செய்தது.
மாநில உரிமைக்காகவும், தமிழ் மொழியின் உரிமைக்காகவும் எவ்வித திட்டங்களையும் அமல்படுத்தாத திமுக, தமிழினத்தின் துரோகி.
8 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி ஜெயக்குமார் கூறினார்.
டி. ஜெயக்குமாருடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பாலகங்கா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் சென்று இருந்தனர்.
