• May 20, 2024

300 வருடங்களுக்கு பிறகு அபூர்வ மகா சிவராத்திரி; 8-ந்தேதி சிவன் கோவில்களில் 4 கால பூஜை

 300 வருடங்களுக்கு பிறகு அபூர்வ மகா சிவராத்திரி; 8-ந்தேதி சிவன் கோவில்களில் 4 கால பூஜை

 2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5  சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.

விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. 

மகா சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது. அன்று இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன. 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் , மந்திதோப்பு காசி விசாலாட்சி அம்மாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட அணைத்து சிவன் கோவில்களிலும்  4 கால பூஜை நடக்கிறது,. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,

அப்போது சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். கூடவே 5 யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5 சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. 

இந்த மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவ தியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும். 

மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.

சர்வார்த்த சித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங் களையும் நிறை வேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும். 

 சிவ யோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.

 2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது

ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது.

இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.

5 யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள். 

சிவ யோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும். உங்கள் வீட்டை பாது காப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள். 

சித்த யோகம் கூடி வருவதால் விநாயக பெருமானையும் இந்நாளில் வணங்கிட வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 

இந்த மகா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.

மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம். 

இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

6 வித எளிய வழிபாடு

மகா சிவராத்திரியன்று அதி காலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவ பூஜைக்கு உரிய பொருட்களை சேகரித்து, வைக்க வேண்டும். 

மாலை நேர வழிபாட்டை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

அன்று இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்ய முடியா விட்டாலும், ‘ *லிங்கோற்பவ* ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.

இது தவிர இந்த ஆண்டு விசேஷ ஐந்து யோகம் கூடும் நாள் என்பதால் முக்கியமாக இந்த 6 எளிய வழி பாட்டையும் செய்ய வேண்டும்.

(1) விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அவரை முதலில் வணங்கினால் சித்த யோகம் உங்களை சிறப்பாக்கும்.

(2) சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி இந்நாளில் வணங்க ஷிரவண நட்சத்திர வேளை உங்களுக்கு சுபயோகத்தை கொண்டு வரும்.

(3) சுக்கிர பிரதோஷம் மகா சிவராத்திரி நாளில் வருவதால் நந்தியெம்பெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும்.

(4) சர்வார்த்தி சித்தி யோக நாள் என்பதால் இந்நாளில் குலதெய்வ வழிபாடும் செய்து பித்ருக்களின் ஆசியால் வெற்றி பெறலாம்.

(5) மகா சிவராத்திரி நாளில் இடர் களையும் பதிகங்கள் பாடி ஈசனைத் தொழ வந்த தீ வினைகள் நீங்கும். வர விருப்பவை நலமாக அமையும்.

(6) சர்வ யோகங்களையும் அருளும் இந்நாளில் 4 கால பூஜை களையும் கண்டு தரிசித்தால் இக, பர இன்பங்கள் யாவும் சேரும்.

மேலும் மகா சிவராத்திரி அன்று அகோராஸ்திர பூஜை செய்தால் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக சிறப்புடன் அமையும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *