சென்னையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் பல்வேறு தரப்பினர் பரிந்துரைகள் வழங்கினர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களுடன் இன்று (27/02/2024) திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளைப் பெற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழிற்துறை அமைப்புகள், உற்பத்தியாளர் சங்கங்கள், அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் தங்கள் பரிந்துரைகளை வழங்கினர்.
பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெற இந்தக் குழுவினர் மண்டல வாரியாக பயணம் மேற்கொண்டனர்.
கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இதுவரை சுமார் 25 ஆயிரம் மனுக்கள் குவிந்து இருக்கிறது. அதில் சுமார் 18 ஆயிரம் கருத்துக்கள் தொலைபேசி மூலம் வந்தவையாகும். 2,500 கருத்துக்கள் இ-மெயில் மூலம் வந்திருக்கின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் 4 ஆயிரம் கருத்துகள் கனிமொழி எம்.பி.யிடம் வந்து சேர்ந்து இருக்கிறது. நேரடியாக மக்களிடம் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஆய்வை முடிக்கும் போது சுமார் 40 ஆயிரம் பரிந்துரைகள் பெறப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த 40 ஆயிரம் பரிந்துரைகளில் இருந்து முக்கிய அம்சங்களை தொகுத்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக தயாரிக்க உள்ளனர்.