அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் விருப்பம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஜயகாந்துக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவ மற்றும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய அறக்கட்டளை உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் ஊர்தோறும் கூட்டங்கள் நடத்த கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் முறையீடு செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வுடன் செல்வதே நல்லது என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீட்டில் எந்த சமரசமும் இல்லாமல் நமக்கு தேவையானதை கேட்டுப் பெற வேண்டும் என்றும் நம்முடைய விருப்பம், வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைப்பதே நல்லது என்றும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தினார்கள்.
எனினும் கூட்டணி யாருடன் வைப்பது என்பது உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.இதற்கிடையே பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
