கோவில்பட்டி ரெயில்நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் தமிழ் தெரியாத ஊழியர்கள்; அடிக்கடி நடக்கும் குளறுபடிகள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியாமான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து ஒவ்வொரு ரெயிலுக்கும் குறைந்த பட்சம் 200 பேர் வரை டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். மதுரை கோட்டத்தில் அதிக வருமானத்தை பெற்று தரும் ரெயில் நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது.
ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இந்தி பேசும் வடமாநில ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அவர்களுக்கு தமிழ் தெரியாது. இதனால்ஏற்படும் குளறுபடி காரணமாக பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்..
அதே போல் இன்று (7-ந் தேதி) காலை முன்பதிவு கவுண்ட்டரில் வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசும் ஊழியர்கள் அலுவலில் இருந்தனர். அப்போது, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய 13 பேர் டோக்கன் பெற்று வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
காலை 11 மணிக்கு ஒரு டோக்கன் மட்டும் பதிவு செய்ததாகவும், பயணிகள் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை என்றும், பெயரை தவறுதலாக பதிவு செய்வதாகவும் வரிசையில் நின்று கொண்டிருந்த மற்ற நபர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புபடை போலீசார் மற்றும் ரெயில்நிலைய நடைமேடை பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பயணிகளை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க டிக்கெட் கவுண்ட்டரில் எந்த நேரமும் தமிழ் தெரிந்தாஹ் ஊழியர் பணியில் இருக்கவேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
