• May 9, 2024

திருச்செந்தூர் அருகே கிராமத்தில் தங்கி ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

 திருச்செந்தூர் அருகே கிராமத்தில் தங்கி ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார்.

இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும்.

அதன்படி இன்று தொடங்கிய  ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்கி இருப்பார்கள்.. இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர். அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டம் சுகந்தலை கிராமத்தில் ஆட்சியர் லட்சுமிபதி தங்கி இருக்கிறார். காலையில் அந்த கிராமத்துக்கு சென்ற ஆட்சியர் லட்சுமிபதி, தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் கடம்பாகுளம் மறுகாலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சீரமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் மற்றும் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் ஆத்தூர் சமுதாய நலக்கூடத்தில் நநடந்த  “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.கமால்தீன், ஆத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமனன், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ராணி மகாராஜபுரத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி மூலம் 15வது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு துணை சுகாதார நிலையக் கட்டுமான பணிகளை ஆட்சியர் லட்சுமிபதிபார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட லெட்சுமிபுரத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ், ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நூலகக் கட்டிடத்தினை ஆட்சியர் பார்வையிட்டார்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியர் லட்சுமிபதி திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறவுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *