• May 20, 2024

தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே முரண்பாடுகள்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

 தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே முரண்பாடுகள்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் பிரச்சார குழு மற்றும் தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு ஆலோசனை நடத்தியது.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நாடாளுமன்றத் தேர்தலை கழகத்தின்  தலைமையில் கூட்டணி அமைத்து சந்திப்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்து அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும்.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்.

வடக்கில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும். திமுக கூட்டணியில் உள்ளவர்கள் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல,முரண்பாடுகள் உள்ளன.பாஜக உடன் கூட்டணி இல்லை என பலமுறை கூறிவிட்டோம்.தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பாஜக வுடன் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை.அந்த பெட்டியை கழற்றிவிட்டோம்.இனிமேலும் அந்த பெட்டியை இன்ஜினுடன் சேர்க்கும் எண்ணமில்லை.

அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவே பேசி வருகிறார்.பாஜக-வை முன்னிலைப்படுத்த அல்ல.நடக்காத விஷயத்தை கூறி திசை திருப்ப முயற்சிக்கிறார். அவரை போல அண்ணே,அண்ணே என்று நாங்கள் கூலைக்கும்பிடு போடுபவர் நாங்கள் கிடையாது.கூலைக்கும்பிடு போட்டு,இங்குள்ள மக்களை ஏமாற்றி காலூன்ற நினைத்தால் அது வீணாக தான் முடியும்.

தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போது, மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக செய்ய தவறிய திட்டங்களை மக்கள் முன் சுட்டிக்காட்டுவோம். மாநில உரிமைகளை புறந்தள்ளிய நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்வோம். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழக மக்களுக்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தாமல், திமுக குடும்பத்தினர் மட்டும் ஆசியாவின் பணக்கார குடும்பங்களாக மாறியதுதான் அவர்களது சாதனை.

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.பருவ மழையின் போது விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய இழப்பீடை உரிய நேரத்துக்குள் திமுக அரசு கொடுக்க தவறிவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு திமுக செய்த துரோகங்களை தோலுரித்துக் காட்டுவோம்.

பன்னீர்செல்வம் பாஜக-விற்கு கொத்தடிமையாக இருப்பது அவரது நடவடிக்கைகள் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *