ஊத்துப்பட்டியில் கோள்கள் திருவிழா: மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ராஜமாணிக்கம்,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் கலந்து கொண்டு டெலஸ்கோப் பயிற்சியை தொடக்கி வைத்தார்.அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்,ஆசிரியர்கள் பாலகணேசன்,மணி, உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் கீதா சக்திவேல் நன்றி கூறினார்.
