மழை வெள்ள நிவாரணம் கோரி விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளத்தால் அழுகி போன மிளகாய் பயிருடன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார் . இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தூத்துக்குடி மாவட்ட தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் வெள்ளதுரை, ஒன்றிய செயலாளர் எல்லப்பராஜ் மற்றும் திரளான அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து தாசில்தார் ராமகிருஷ்ணனிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது :-

குறைந்த தாழ்வு அழுத்த மண்டலத்தால் விளாத்திகுளம் வட்டத்தில் மிளகாய் பயிர் அதிக அளவில் விவசாயம் செய்து உள்ளனர். அத்துடன் உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு போன்ற பல்வேறு மானாவாரி பயிர்கள் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்து இருந்தனர்.தற்போது பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டும் மழை நீர் தேங்கியும் முழுவதும் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது.
அத்துடன் ஏகப்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. விவசாயிகள் வளர்த்த ஆடு, மாடு, கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. இதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து உள்ளோம்.
இந்த நிலையில் வேடபட்டி கிராமத்தில் சுமார் 2500 ஏக்கர் நிலம் வைப்பாறு மற்றும் வேடபட்டி கண்மாய் வெள்ளத்தால் அழுகி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மிளகாய் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50000 , மானாவாரி புஞ்சை பயிர்களுக்கு 30000,மாடு இழப்புக்கு 30000 ஆடு இழப்புக்கு 10000 , வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடும் அத்துடன் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 10000 வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
