• June 7, 2025

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை; மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம்

 சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை; மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம்

2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொன்முடி, விசாலாட்சியிடம் தண்டனை விவரங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் கேட்டார். அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, தண்டனை வழங்கும் போது அவர்களுடைய வயது மற்றும் மருத்துவ சிகிச்சைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்கவும் கோரிக்கை வைத்தார். பொன்முடியின் மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

பொன்முடியின் வயதையும் மருத்துவ காரணங்களையும் பதிவு செய்கிறேன், ஆனால் கீழமை நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்தது செய்ததுதான். அதில் மாற்ற முடியாது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தண்டனை விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரனால் அறிவிக்கப்பட்டது

 அதன்படி பொன்முடி,அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அது போல் ரூ 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்யும் வகையில் சிறை தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்திருந்தார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
சட்ட நடைமுறைகளை பார்த்தோம் என்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி இழப்பு அறிவிப்பாணையை பேரவை செயலகம் வெளியிடும். சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும்.
தகுதியிழப்புக்கு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். காலி என அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *