தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்

பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்துடன் பிரேமலதா.
சென்னை திருவேற்காட்டில் ஒரு திருமண மண்டபத்தில் தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.அவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். `கேப்டன் வாழ்க’ என்று உற்சாக குரல் கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரேமலதா தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டதும் தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தே.மு.தி.க. பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பிரேமலதா, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பின்னர் பொதுச்செயலாளராக பிரேமலதா பேசுகையில், “கேப்டன் (விஜயகாந்த்) பார்த்துதான் எனக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தார். இன்று மிகப்பெரிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தலைவரின் லட்சியத்தை அடைய என்னுடன் உழைக்க நீங்கள் தயாரா?. உங்கள் பொதுச்செயலாளராக பணிகளை மேற்கொள்வேன்” என்றார். அதற்கு கூட்டத்தினர் அனைவரும் உங்களுடன் சேர்ந்து உழைக்க தயார் என்று குரல் எழுப்பினார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பின்னர் தே.மு.தி.க. யார் பக்கம் நிற்கப்போகிறது என்பது பலரின் கேள்வியாக உள்ள நிலையில், இப்போது விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.
மேலும் பிரேமலதாவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியின் உள்ளே எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரேமலதா தற்போது பொருளாளர், பொதுச்செயலாளராக தொடர்கிறார். பொருளாளர் பொறுப்பு விஜயகாந்தின் மூத்த மகனுக்கு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
