கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பகுதியில் கடந்த 13.11.2023 அன்று மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மணி (வயது 60) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன்கள் லெட்சுமணன் (எ) லெச்சார் (43), சங்கரசுப்பு (40), குமாரசாமி மகன்கள் சீனிபாண்டி (31), பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி (35), துரைராஜ் மகன் ராமையா (எ) பழனி (45), ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் இசக்கிமுத்து (எ) பாபுஜி (21), முருகன் மகன் மாரி (எ) மதன் (22), மணக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரசுப்பு மகன் இசக்கிமுத்து (36) மற்றும் ஆர்.சி தெருவை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் மாரியப்பன் என்ற மாரியரசு (33) ஆகிய 9 பேரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைதான 9பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி , குறிப்பிட்ட 9 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் 9பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 182 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
