எடப்பாடி பழனிசாமி கேட்ட வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டால் விவாதத்திற்கு நாங்கள் தயார்; டி.ஜெயக்குமார் சவால்

சென்னை திரு வி. க. நகர் பகுதியில் மழை வெள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி. ஜெயக்குமார் கூறியதாவது :-
புயல் பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள் வரும்போது மத்திய குழு வருவது என்பது வாடிக்கையான ஒன்று. இந்த புயலால் பாதிக்கப்பட்டது அனைத்து தரப்பு மக்களும்தான். சென்னையை சுற்றியுள்ள விவசாயிகள்,மீனவர்கள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில் இந்த புயல் இருந்தது.
புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் கூட அதனுடைய தாக்கத்தினால் சென்னையில் மழை வந்து வெள்ள காடாக மாறிவிட்டது. புறநகர் பகுதிகளும் வெள்ளக் காடாக மாறியது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தற்போது நாம் இருப்பது திரு.வி.க.நகர் பகுதி.இங்கு முழுமையான பாதிப்பு உள்ளது.இதுபோல சென்னையில் பல இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியது.இன்னும் கூட தண்ணீர் பல இடங்களில் வடியவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்திருக்கவேண்டும்.அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அறிவித்திருந்தால் மக்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் இந்த விடியா அரசு மக்களை தயார் செய்யவில்லை. இதனால்தான் மக்களின் கோபத்திற்கு இந்த அரசு ஆளானது.
இங்கு வாழும் மக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான பகுதியில் உள்ள மக்களுக்கு சேமிப்பு என்பது இல்லை. தினந்தோறும் வேலைக்கு சென்றால் மட்டும் தான் அவர்களுக்கு வருவாய். புயலால் அவர்கள், 6 நாட்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
6 நாட்களுக்கு ரூ.6 ஆயிரம் என்பது சரி.ஆனால் வீட்டில் உள்ள மிக்ஸி போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் முழ்கியது. நாங்கள் சென்ற இடங்களில் மக்கள் எங்களிடம்,கட்டியிருக்கும் துணியோடு நாங்கள் இருக்கிறோம்,உடைகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் வீணாகிவிட்டது என்று சொன்னார்கள். மின்சார ஒயர்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீணாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் 6 ஆயிரம் என்பது எப்படி சரியாக இருக்கும்?
எங்கள் ஆட்சியில் 5 ஆயிரம் வழங்கினோம்.அதை குறிப்பிட்டு அவர்கள் பேசுகிறார்கள்.இப்படி ஏட்டிக்கு போட்டியாக இருக்கக்கூடாது.8 வருடம் ஆகிவிட்டது.அன்று 5 ஆயிரம் என்பது இன்றைக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு சமம். எனவேதான் எங்கள் பொதுச்செயலாளர் 12 ஆயிரம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.6 ஆயிரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
எங்கள் ஆட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அளித்தோம்.இப்போது அவர்களுக்கு அதுவும் இல்லை. எதை கேட்டாலும் நிதி நெருக்கடி என்று சொல்கிறார்கள். எங்கள் ஆட்சியிலும் நிதி நெருக்கடி இருந்தது. நிதி நெருக்கடி இருந்தபோதிலும் கூட சுனாமியாக இருக்கட்டும்,நிவர் புயலாக இருக்கட்டும்,வர்தா,ஒக்கி புயல்,கஜா புயலாக இருக்கட்டும் மக்களுக்கு வேண்டியதை செய்தோமா,இல்லையா.?
வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வரும் மத்திய குழுவுக்கு தமிழக அரசு உண்மையான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும். புயலால் உண்டான பாதிப்புகளை மத்திய அரசிடம் மறைத்து காண்பித்தால், அரசு கோரிய நிதி கிடைக்காது. புயல் வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு போதிய அளவில் உதவிகளை செய்ய முடியாது. சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கை என்ன ஆனது.? திருப்புகழ் அறிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.?
அரசின் நிர்வாக திறமையின்மையும், அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையும் தமிழக மக்களை கதிகலங்க வைத்துவிட்டது. திமுக அரசு மழை நீர் வடிகால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு உரிய நேரத்துக்குள் பணம் கொடுக்காததால், பல இடங்களில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வினரால் வெற்றிபெற முடியாது. மிக்ஜாம் புயலின் தாக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். மத்திய அரசிடமிருந்து, வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு எதிர்கட்சி என்ற முறையில் உரிய அழுத்ததை கொடுப்போம்.
மிக்ஜாம் புயலால் பாதித்த இடங்களில் தமிழக முதலமைச்சர் மக்களை சந்திப்பதில்லை, தலைமைச் செயலாளரும், அதிகாரிகளும் சந்திக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் ரிமோட் முதலமைச்சர் போலத்தான் இருக்கிறார்.
வடிகால்வாய் பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பணிகள் எங்கெல்லாம் நடந்துள்ளது என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ள வெள்ளை அறிக்கையை தமிழக அரசு கொடுத்தால், மறுநாளே விவாதத்துக்கு தயார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
