கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் சர்வீஸ் ரோடு பணியை வேகப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் கழிவுநீர் ஊற்று காரணமாக நடுப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி சுகாதார கேடுகள் பெருகி வருகிறது.
மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து நிறுத்தப்படும். மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டவுடன் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இந்த சூழல் பாலம் அமைந்ததில் இருந்து ஏற்பட்டு வருகிறது.
மேலும் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றுவதற்கு காலக்கெடு கொடுக்கப்பட்டு அது முடிந்து விட்டது. இருப்பினும் சர்வீஸ் சாலை முழுமை பெறவில்லை.
இதனால் சர்வீஸ் சாலைப்பணியை வேகப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று பஸ் நிலயம் எதிர்புறம் உள்ள பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன், உதவி செயலாளர் பாபு, ஏ.ஐ.டி.யு.சி.பஞ்சாலை மாவட்ட தலைவர் பரமராஜ், இந்திய கம்யூனிஸ்டு நகர உதவி செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன், பொருளாளர் ராஜு, மாதர் சங்க பொறுப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
