சென்னையில் மழை பாதிப்பு : அ. தி. மு. க. வினர் சொந்த செலவில் உதவி செய்கிறார்கள்; டி. ஜெயக்குமார் பேட்டி

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.யின் போது டி. ஜெயக்குமார் கூறியதாவது :-
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.அதுபோல புளுகு மூட்டைக்கு சொந்தகாரராக இருக்கின்றது இந்த அரசு.பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லாமல் போய்விட்டது.வானளவில் பொய் சொல்கிறார்கள்.மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
வெள்ளம் வடிந்துவிட்டது என்கிறார்கள். அனைத்து இடங்களிலும் மார்பளவு, இடுப்பளவு தண்ணீர் இருக்கும் நிலைதான் உள்ளது. ராயபுரம் தொகுதி குறிப்பாக 5வது மண்டலத்தில் மோசமான அளவில் தண்ணீர் உள்ளது.
மழை 4 ம் தேதி நள்ளிரவு முதலே நின்றுவிட்டது.ஆனால் இன்னும் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி அசுத்தம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள்.
இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வசதி இல்லை.வீட்டில் குடி தண்ணீர் இல்லை. பால் கிடைக்கவில்லை.அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரமும் வரவில்லை,மழை நீரும் வடியவில்லை. மழை நீருடன் சாக்கடையும் கலந்து மக்கள் சொல்ல முடியாத அளவுக்குத் துயரத்தில் உள்ளனர்.
ரூ 4 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளோம் என்கிறார்கள்.3369 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் உள்ளது. அதனை முறைப்படி தூர்வாரி கனால்களோடு இணைத்திருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் இவர்கள் இணைப்பதற்குண்டான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் விளைவாக சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல மோட்டார்களை பயன்படுத்தி முழுமையான அளவில் தண்ணீரை எடுக்கவேண்டும்.
ஆனால் இந்த விடியா அரசில் மக்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் செல்லும் நிலைதான் உள்ளது.
ராயபுரம்,வியாசர்பாடியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
அமைச்சர் உதயநிதி சென்ற இடத்தில் ஒரு பெண் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இரண்டு அமைச்சர்களும் எஸ்கேப் ஆகியுள்ளார்கள். ராயபுரம் பகுதியில் பல இடங்களில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை.
எங்கள் கட்சியின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் ஆணைப்படி கழக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை தங்களுடைய சொந்த செலவில் செய்துவருகிறார்கள்.சென்னை மாநகராட்சி உணவு அளிக்கும் முயற்சியை எடுத்ததா என்றால் எங்கும் கிடையாது. மக்கள் எப்படி மண்டல அலுவலகத்திற்கு சாப்பாட்டை வாங்க வருவார்கள்.அவர்கள் இருக்கும் இடத்தில் அளித்தால்தானே அதனை அவர்கள் பயன்படுத்த முடியும். ராயபுரத்தில் அவர்கள் அளித்த பொங்கலை யாரும் சாப்பிட முடியாத அளவிற்கு உள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
