கோவில்பட்டி தாசில்தார் அலுவலகத்தை மாற்று திறனாளிகள் முற்றுகை ; 6 மணி நேர பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள்.
தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளியின் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெர்சில் தலைமையில் மாவட்டச் செயலாளர் அழகு லட்சுமி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பகல் 12 மணி அளவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன் அறிவிப்பு இல்லாமல் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டும் போராட்ட குழுவினர் நகரவில்லை. நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால் போராட்ட குழுவினருடன் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், தாசில்தார் லெனின் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உங்களின் கோரிக்கை மனுக்கள் முறையாக ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 6 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
