புதூர் யூனியனில் தி.மு.க.வின் ஒரே கவுன்சிலர், அ.தி.மு.க.வில் சேர்ந்தார்

விளாத்திகுளம் தொகுதி புதூர் யூனியனில் ராமச்சந்திரபுரம் 13 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக பெருமாள்சாமி பணியாற்றி வந்தார்.
இந்த யூனியனில் மொத்தம் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் இவர் மட்டுமே தி.மு.க. வை சேர்ந்தவராக இருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. மீது அதிருப்தியில் இருந்த கவுன்சிலர் பெருமாள் சாமி, விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் ஏற்பாட்டின் பேரில் தி.மு.க.வில் இருந்து விலகி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க, வில் இணைந்தார்.
அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், புதுார் ஒன்றிய சேர்மன் சுசிலா தனஞ்செயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுார் யூனியனில் இருந்த ஒரு தி.மு.க., கவுன்சிலரும் அ.தி.மு.க,விற்கு சென்று விட்டதால் ஆளும் கட்சி கவுன்சிலர் ஒருவர் கூட தற்போது புதுார் யூனியனில் இல்லை.
