உடல் உறுப்புகள் தானம்: விவசாயி உடலுக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் மரியாதை

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் மஜ்ரா மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (வயது 42) என்பவர் 20.11.2023 இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து கிருஷ்ணசாமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான அனுமதியை விவசாயி குடும்பத்தினர் வழங்கினர். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
.உடல் உறுப்பு தானம் செய்யப்படுபவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இன்று விவசாயி கிருஷ்ணசாமி உடலுக்கு அரசின் சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் .ஜேன் கிறிஸ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்த கிருஷ்ணசாமி மனைவிக்கு அரசின் சார்பில் நிரந்தர பணியும் அவரின் 2 மகன்களுக்கான கல்வி செலவிற்கும் நடவடிக்கை எடுப்பதாக குடும்பத்தாரிடம் உறுதி கூறினார்கள்.
விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன், கிளைச் செயலாளர் குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
