• June 8, 2025

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 102 வயதில் மரணம்; கோவில்பட்டியில் பிறந்தவர்  

 மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா 102 வயதில் மரணம்; கோவில்பட்டியில் பிறந்தவர்  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது

பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் சென்னை குரோம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், ,முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மதியம்  தி.நகர் கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர் இறுதி சடங்கு நடைபெறும்.

கோவில்பட்டியில் பிறந்தவர்

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா கோவில்பட்டியில் 1921 ம் ஆண்டு ஜூலை 15ந்தேதி பிறந்தவர்.

 தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார்.

பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதானார். கல்லூரிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசை நிறைவேறவில்லை.

சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள் ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வெளியே வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்.

நேதாஜி 1939-ல் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கை நடத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1938-ல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டார். பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதிவந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவர். ‘ஜனசக்தி’ இதழில் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து உரை ஆற்றியுள்ளார்,

* எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், கதர் ஆடை அணிந்து வருபவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

தமிழ்நாடு அரசின் தகைசால் விருது முதல் முறையாக 2021ம் ஆண்டு சங்கரய்யாவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது

தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பொதுவாழ்வில் மாணவராக, சுதந்திர போராட்ட வீரராக,  கட்சித்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, விவசாய சங்க மாநில மற்றும்  அகில இந்திய தலைவராக இருந்து  பல சேவைகளை புரிந்த  என்.சங்கரய்யா, ‘உழைக்கும் மக்களின் தோழர்’ என போற்றப்படுகிறார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *