மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்டு அழைத்துவர அரசு நடவடிக்கை; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 29 மாதங்களில் தொடர்ச்சியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசாலும், மாலத்தீவு அரசாலும் சிறைபிடிக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. இதுகுறித்து தனியார் டி. வி. க்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சரும், அ. தி. மு.க. அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் கூறியதாவது :_
விடியா தூங்கு மூஞ்சி அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்களின் உடமைகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சேதப்படுத்தபட்டு வருவதும் அரங்கேறி வருகிறது.
மீனவர்கள் சிறைபிடிக்கும் பொழுதெல்லாம் கடிதம் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதி வருகிறார். அவர்களை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வருவதில்லை.
தற்போது இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 38 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
இதேபோல், கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 13 பேர், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாலத்தீவு அரசு அவர்களை சிறைபிடித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு இரண்டு கோடியே 27 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளது. அபராதம் விதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், இது நாள் வரை மாலத்தீவு சிறையில் வாடி வருகிறார்கள்.
அவர்களை மீட்க தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாலத்தீவு சிறையில் வாடி வரும் தூத்துக்குடி மாவட்டம் மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதிமுக ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டால், அவர்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையையும் அளித்து உள்ளது.
எனவே தற்போது சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் மீனவர்களை மீட்பது மட்டுமல்லாமல், மீட்டு கொண்டுவர முடியாத படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து, பாதிப்படைந்துள்ள மீன்பிடி உபகரணங்களுக்கும், தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
