இந்து சமய அறநிலையத்துறை பற்றி அண்ணாமலை கருத்து: டி. ஜெயக்குமார் விமர்சனம்

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை தொடர் முழக்க கூட்டம், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே நடைபெற்று வந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-
பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோது உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக மாநில மொழி இருக்க வேண்டும் என வாதாடியவர். இன்று பிரதமராக இருக்கும் பட்சத்தில் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடும் மொழியாக இருக்க வேண்டும் என்ற சரத்தை ஏற்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை.
மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஆண்டாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை மாற்ற வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாடு என மாநிலத்திற்கு பெயர் இருக்கும்போது தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் வைப்பதில் என்ன பிரச்சினை? ஒரு பிரச்சினையும் கிடையாது. இதற்கான சரியான நேரம் இது தான்.
நான் சட்ட அமைச்சராக இருந்தபோது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் எங்களுடைய உறுப்பினர்கள் இது குறித்து பல முறை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
திமுகவில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களும் வலியுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள் வலியுறுத்துவார்களா? என்று தெரியவில்லை.
தலைவர்கள் புகழ் போற்றப்பட வேண்டும். அதுதான் மாண்பு, மரியாதை. தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்த ஒரு கருத்தும் முகம் சுழிக்கிற கருத்தாகத் தான் இருக்கும். அது யார் சொன்னார்களோ (அண்ணாமலை) அவர்களுக்கு தான் பின்னடைவு. இதை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று என்ற அண்ணாமலையின் கருத்திற்கு பதில் அளித்த அவர், கடல் வத்தி கருவாடு சாப்பிட வேண்டும் என்று நினைத்த கொக்கு குடல் வத்தி செத்ததாம். முதலில் அது நடக்கட்டும் (பா.ஜ.க. ஆட்சிக்கு வரட்டும்)”, என்ற ரீதியில் விமர்சித்தார்.
