• June 7, 2025

புனித கங்கை வரலாறு

 புனித கங்கை வரலாறு

கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வ தில்லை. `கங்கா மாதா’ என்றுதான் சொல்வார்கள்.

ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.

இமயமலை சாரலில் உருவாகும் கங்கை நதி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து மக்களை வாழ வைத்து, வளப்படுத்தி விட்டு வங்கக்கடலில் கலக்கிறது. இது புவியியல் ரீதியிலான உண்மை. ஆனால் புராணங்கள் மூலம்தான் கங்கையின் சிறப்பு இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

கங்கை நதி தோற்றத்தின் பின்னணியில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இருப்பதாக இந்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் கங்கையை புனித கங்கையாக கும்பிட வைக்கிறது. எனவே புராணத்தில் கூறப்பட்டுள்ள புனித கங்கை வரலாற்றை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் புனித கங்கை வரலாற்றை பார்க்கலாம்.

ஒரு தடவை இமய மலையில் சிவபெருமான், மகா விஷ்ணு, பிரம்மா மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு தனது இனிமையான குரலால் ராகம் போட்டு பாடத்தொடங்கினார். கேட்பவர்களை எல்லாம் அந்த பாடல் மதிமயங்கச் செய்யும் வகையில் இருந்தது.சிவபெருமானோ விஷ்ணுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் உருகிப் போய்விட்டார். அதாவது உண்மையிலேயே கருணை வெள்ளமாக உருகி விட்டார்.

இதைக்கண்ட பிரம்மா ‘சட்டென்று ஒரு காரியம் செய்தார். சிவபெருமான் கருணை வெள்ளமாக மாறி இருந்ததை தடுத்து, அந்த தண்ணீர் முழுவதையும் தனது கமண்டலத்தில் அடைத்துக் கொண்டார்.அதாவது சிவனின் அம்சமாக அந்த கருணை வெள்ளம் இருந்தது. இந்த நிகழ்வு நடந்த சில தினங்களில் பூலோகத்தில் மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து அங்கு வந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார்.

குள்ளராக இருந்த வாமனரை புரிந்து கொள்ளாமல் மகாபலி சக்கரவர்த்தியும் மூன்று அடிதானே, எடுத்துக்கொள் என்றார். அடுத்த வினாடி வாமனர் வளர்ந்து விண் உலகையே ஒரு காலால் அளந்து விட்டார். இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் குள்ள வாமனராக வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

அப்போது அங்கு இருந்த பிரம்மா சமயோசிதமாக ஒரு செயலை செய்தார். தனது கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த ஈசனின் கருணை வெள்ளத்தை எடுத்து விஷ்ணுக்கு அபிஷேகம் செய்தார். அந்த கருணை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.தேவர்களும், முனிவர்களும் இதற்காகவே காத்திருந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

மேல் உலகில் ஓடிய அந்த ஆற்றுத் தண்ணீரை தங்கள் தாகம் தீர்க்க வந்த புனித பெண்ணாக கருதினார்கள். எனவே அவர்கள் அதை `மந்தாகினி’ என்று அழைத்து போற்றிக் கொண்டாடினார்கள்.ஆகாயத்தில் மட்டுமே ஓடியதால் அதை ஆகாய கங்கை என்று மற்றவர்கள் அழைத்தனர். இந்த ஆகாய கங்கை பின்னர் பூமிக்கு வந்தது, கங்கை எப்படி பூமிக்கு வந்தது என்பதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு கூறப்படுகிறது.

சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகளால் உருவான ஆகாய கங்கை விண்ணில் தேவர்களுக்கு தாகம் தீர்த்து வந்த காலத்தில் பூமியில் பகீரதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் இருந்தும் அவனுக்கு குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது. எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் அவனுக்கு தாமதமாகிக் கொண்டே இருந்தது.

இறுதியில் பித்ரு தோஷம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்தான். பித்ருக்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் பித்ருக்கள் ஆத்மா சாந்தி அடையும். அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முனிவர்கள் கூறினார்கள். உடனே கங்கா தேவியை நோக்கி பகீரதன் தவம் இருக்க தொடங்கி விட்டான்.அவன் முன்பு தோன்றிய கங்கை என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்?

அதற்கு பகீரதன்,பாவம் செய்த அத்தனைபேரும் குளித்து எழுவதால் அவர்கள் செய்த பாவத்தை எல்லாம் என் மீது சுமத்தி விடுகிறார்கள். இந்த பாவங்களை நான் எவ்வளவு காலம் தான் சுமந்து கொண்டிருப்பது? இந்த பாவங்கள் என்னை விட்டு அகல எனக்கு ஏதாவது விமோசனம் சொல்லுங்கள் என்று ஒருமுறை சிவனிடம் கங்கை கேட்டாள்.

சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார். பிறகு அவர் உன் மீது பாவம் படிகிறது என்பது என்னவோ உண்மைதான். அது உன்னிடம் நிலையாக இருப்பதில்லை. நீ இமயமலையில் இருந்து புதிய நீரைக் கொண்டு வருகிறாய் ஒவ்வொரு விநாடியும் பழைய நீரைக் கொண்டு சென்று கடலிடம் சேர்ப்பித்து விடுகிறாய். அந்த நீரை கடல்ராஜா பெற்றுக் கொள்கின்றான். அவற்றையெல்லாம் சூரிய பகவான் ஆவியாகக் கொண்டு சென்று வானத்திலே மழை நீர் மேகமாக்கி விடுகிறான்.

அதனால் பாவங்கள் உன்னிடத்திலோ அல்லது கடலிலோ தங்குவதில்லை. அதேபோல சூரிய பகவானிடமும் இருப்பதில்லை. மேகங்கள் மழையால் பூமியிலே பொழிந்து விடுகின்றன. ஆக அங்கேயும் பாவங்கள் தங்குவதில்லை. பூமியில் இருந்து கங்கை வழியாக மேல்நோக்கிச் சென்ற பாவங்கள், மீண்டும் பூமாதேவியிடமே வந்து உன்னிடத்தில் கலக்கின்றன. ஆக மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும்.

இந்த நிலையில் உன்னை முழுவதுமாக, பரிசுத்தமாக புனிதப்படுத்திக் கொள்வது என்பது மகான்களிடம் தான் உள்ளது. மகான்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருப்பவர்கள். எந்த நேரமும் இறைச்சிந்தனையிலேயே இருப்பவர்கள். அத்தகைய மகான்கள் உன்னுடைய கங்கையிலே வந்து நீராடினால் உன்மீது படிந்திருக்கும் எவ்வளவு பெரிய பாவங்களும் தீயில் போட்ட சருகுகள் எப்படி அந்த நொடியிலேயே பொசுங்கி சாம்பலாகி விடுகிறதோ, அதுபோல மகான்களின் பா

தங்கள் பட்ட மாத்திரத்தில் உன் மீதுள்ள பாவங்கள் நாசமாகி விடுகின்றன. உன்னை அவர்கள் புனிதப்படுத்தி விடுகின்றனர். எனவே நீ பயப்பட வேண்டாம் என்றார் சிவபெருமான். அதன்படி இன்றும் ஜமதக்னி, கபிலர், பராசர் வேதவியாசர் போன்ற மாமுனிவர்கள் எல்லாம் தவம் செய்து கங்கையை புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கங்கை எப்போதும் ஞானிகளையும், மகான்களையும் தேடிக்கொண்டே இருக்கிறாள். சிலசமயம் அவளே ஞானிகளைத் தேடிப்போய், தன் மீது இருக்கும் பாவத்தை போக்கிக் கொள்கிறாள். பண்டரிநாதன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இப்படியொரு நிகழ்ச்சி நடந்து இருப்பதை அறியலாம்.

கங்கைக்கரையில் வளர்ந்த நாகரிகம், பூஜாகாரியம், பித்ரு சாந்தம் இன்றுவரை தவறாது நடந்து வருகிறது. இந்த கங்கையை நமக்கு அளித்த பகீரதனுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். முதலில் பகீரதனை வணங்க வேண்டும். பிறகு கங்கையை வணங்குதல் வேண்டும்.

தொகுப்பு: காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *