• June 7, 2025

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர்  29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து தினமும் கோவிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை , அலங்காரம் மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. காலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு 4:30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது.

காலை 6:30 மணிக்கு மேல் 7 மணிக்குள் துலா லக்னத்தில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருதல் (ரதாரோகணம்) நடைபெற்றது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர்

காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, , கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, ரவீந்திரன், சண்முகராஜ் நிருத்தியலட்சுமி , கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இன்றைய மண்டகபடிதாரரான வணிக வைசிய செட்டியார் சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன் , பொருளாளர் தங்க மாரியப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். தேர் கோவில் முன்பிருந்து நகர தொடங்கியது. நான்கு ரதவீதிகளை சுற்றி மீண்டும் கோவிலை அடைந்தது. வழி நெடுக பக்தர்கள் கூடி இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7.15 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 9-ம் நாள்  மண்டகபடி கட்டிடத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.

விழா நிறைவு நாளன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *