திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 13ந்தேதி தொடக்கம்

பைல் போட்டோ
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.
பக்தர்கள் காப்புக்கட்டிக்கொண்டு சஷ்டி மண்டபத்தில் விரதத்தினை தொடங்குவார்கள். முதல் 5ஆம் திருநாள் வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். நவம்பர் 18ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தினை முடித்துக்கொண்டு கடலில் நீராடிவிட்டு சாப்பிடுவார்கள். நவம்பர் 19 ம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாணம் நடைபெறும்.
